ஆணவக் கொலை - கவின் உறவினர்கள் மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.டி. ஊழியரை ஆணவக்கொலை செய்த  பெண்ணின் தம்பிக்கு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த  கவின் சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கவினும், பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள ஒரு சித்த மருத்துவ மையத்தில் பணிபுரியும் ஒரு இளம் பெண்ணும் பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கவின் அந்த பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் வெவ்வெறு சமூகம் என்பதால் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் பெண்ணின் பெற்றோர் கவினுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் தனது குடும்பத்தினருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் காதலி பணியாற்றும் சித்த மருத்துவமனைக்கே அழைத்து வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த பெண்ணை பார்க்க வந்த கவினை தோழியின் சகோதரரான சுர்ஜித் தனியாகப் பேச வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை ஓட ஓட விரட்டி தலை, முகம், முதுகு என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர்  பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்குச் சென்று கவின் சரணடைந்தார். அப்போது வெவ்வேறு சமூகம் என்பதாலும், பல முறை எச்சரித்தும், காதலை கைவிடாததால், அக்காவை காதலித்தவரை வெட்டிக் கொன்றதாக தம்பி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து சுர்ஜித் நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நெல்லையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.டி. ஊழியரை ஆணவக்கொலை செய்த விவகாரத்தில் பெண்ணின் பெற்றோரும், சார்பு காவலர் ஆய்வாளர்களுமான தாய், தந்தை ஆகியோர் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்  ஆணவக்கொலை செய்யப்பட்ட  இளைஞர் கவின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர் கொலைக்கு காரணமான பெண்ணின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Night
Day