எழுத்தின் அளவு: அ+ அ- அ
மழைக்கால கூட்டத் தொடரில் 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடரில், பல்வேறு முக்கியமான சட்ட அலுவல்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 8 புதிய மசோதாக்களை இந்த தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, புவிசார் பாரம்பரிய தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா, தேசிய ஊக்க மருந்து தடுப்பு திருத்த மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் சரக்கு மற்றும் சேவைகள் வரி திருத்தம் மசோதா, ஜன விஸ்வாஸ் (விதிகளில் திருத்தம்) மசோதா, ஐ.ஐ.எம் திருத்த மசோதா மற்றும் வரி விதிப்புச் சட்டங்கள் திருத்த மசோதா போன்ற மசோதாக்களும் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றை தவிர கடந்த பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் பரிசீலனையில் இருக்கும் புதிய வருமான வரி மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஏராளமான சட்டமசோதா நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகி வரும் நிலையில், பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க் கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது குறித்தும், பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மத்திய அரசிடம் பதில் கேட்டும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க முடிவு செய்துள்ளன.