எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திமுக முன்னாள் நிர்வாகியான ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. பின்னர் இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மார்ச் 7ஆம் தேதி மாற்றப்பட்டது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 20 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் 28 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்த சென்னை மகளிர் நீதிமன்றம், தண்டனை விவரங்கள் இன்று அறிவித்தது. குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறைப்பு இல்லாத ஆயுள்தண்டனை மற்றும் 90 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளது.