மிளகாய் பொடி தூவி எஸ்கேப் ஆன ரவுடி... பக்கா பிளான் போட்டு கொடுத்த மனைவி...

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் பெண் காவலர் மீது மிளகாய் பொடி தூவி தப்பிச் சென்ற கைதியால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு உதவிய அவரது மனைவி உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல் புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா. இவர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஐகோர்ட் மகாராஜா பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் விளாத்திகுளத்தில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு விசாரணைக்காக பேரூரணி சிறையில் இருந்த கைதி ஐகோர்ட் மகாராஜாவை பெண் காவலர் உள்ளிட்ட இரண்டு ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் விளாத்திகுளம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்பு விளாத்திகுளம் நீதிமன்றத்தில் கைதி ஐகோர்ட் மஹாராஜாவை ஆஜர் படுத்திவிட்டு, பேருந்து மூலம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது பேருந்தில் ஐகோர்ட் மகாராஜா உடன் அவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் மற்றொரு நபர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நபர்கள் காவல்துறையினருக்கு தெரியாமல் ஐகோர்ட் மகாராஜாவிடம் மிளகாய்ப்பொடி பாக்கெட்டை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்தவுடன் பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக, மினி பேருந்தில் ஏறுவதற்காக காவல்துறையினர் கைதி  ஐகோர்ட் மகாராஜாவை அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை பெண் காவலரின் முகத்தில் தூவி விட்டு மற்றொரு காவலரை கீழே தள்ளிவிட்டு ஐகோர்ட் மகாராஜா தப்பி ஓடி உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி தப்பி ஓடிய கைதி ஐகோர்ட் மகாராஜாவை தேடி வருகின்றனர்.

தப்பி ஓடிய உதவிய கைதியின் மனைவி பிரியதர்ஷினி, அவர்களுக்கு உதவியாக இருந்த மற்றொரு நபர் என மூன்று பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களையும் தேடி வருகின்றனர். 

Night
Day