காலில் குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதி

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள் 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். மூவர் மீதும் கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை காணலாம்...

கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் ஆள் அரவமற்ற பகுதியில் தனது ஆண் நண்பருடன் இரவு நேரத்தில் காரில் தனிமையில் இருந்த கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன் அவருடன் இருந்த இளைஞரும் அரிவாளால் வெட்டப்பட்டார். கல்லூரி மாணவியை சீரழித்த மூன்று பேரும் தப்பியோடி தலைமறைவாக இருந்தனர்.  

தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர் . தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றவாளிகள் 3 பேரும் கோவை மாவட்டம் துடியலூர் அடுத்து உள்ள வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை  பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர். மூன்று பேரும் தலைமறைவாக இருந்த இடத்தை அடைந்து போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற மூன்று பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அதில் சந்திரசேகர் என்ற தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றனர். இதில் தலைமைக் காவலர் சந்திரசேகரின் இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. இதையடுத்து தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் மூன்று பேர் காலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர்கள்  கீழே விழுந்தனர். 

பின்னர் அவர்களை பிடித்து விசாரித்த போது மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காளீஸ்வரன் என்பது தெரிய வந்தது. இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது. 

இதையடுத்து 3 பேரையும் அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும்  அரிவாளால் வெட்டப்பட்டதில் இடது கை மணிக்கட்டில் காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மூன்று பேரும் கோவை மாவட்டம் இருகூரில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவது தெரியவந்துள்ளது. மூன்று பேரில் கருப்பசாமியும், காளீஸ்வரனும் சகோதரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு, வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடவியல் துறை அதிகாரிகள், அந்த படிந்திருந்த ரத்தக் கரைகளை சேகரித்தனர். 

கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள் சுட்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் படிந்துள்ள ரத்தக் கரைகள் சேகரிக்கப்பட்டன. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் நிறுத்தப்பட்டு யாரையும் அனுமதிக்காமல் கண்காணித்தனர்.
இதனிடையே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வந்த போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்தார். மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிடிபட்ட குற்றவாளிகள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில்  கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். மூன்று பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின்னர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

Night
Day