அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
250-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட போயிங் ட்ரீம்லைனர் விமான விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, கடந்த இரண்டு நாட்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் நடந்த இந்த விபத்து தேசத்தையே உலுக்கியதாகவும் கூறினார். சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் எனத் தெரிவித்தார்.
சம்பவத்தன்று விமானம் பகல் 1:39 மணிக்கு புறப்பட்டதாகவும் அடுத்த சில வினாடிகளிலேயே விமானி முழு அவசர நிலையை அறிவித்தாகவும் குறிப்பிட்டார்.
1:40 மணிக்கெல்லாம் விபத்து நிகழ்ந்து விட்டதாக கூறிய அவர், அதற்கு முன்னர், அந்த விமானம், பாரிஸிலிருந்து டெல்லிக்கும் டெல்லியிலிருந்து அகமதாபாத்துக்கும் வெற்றிகரமாக பயணங்களை முடித்திருந்ததாகவும் தெரிவித்தார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்த சிறிது நேரத்திலேயே மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியதாக கூறிய அவர், சம்பவம் குறித்த முழுமையான விசாரணைக்கு மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து நேற்று மாலை 5 மணியளவில் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக கூறிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, அதனை டிகோடிங் செய்தால் விபத்தின் போது அல்லது விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பது பற்றிய ஆழமான விபரங்ககள் தெரிய வரும் என விமான விபத்து புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறுவதாக குறிப்பிட்டார்.
அவர்கள் முழு விசாரணையை மேற்கொண்ட பிறகு அளிக்கப் போகும் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின் பேரில், ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளதாக கூறினார். இந்தியாவில் உள்ள 34 ட்ரீம்லைனர்களில், எட்டு ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.