ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாள் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை பக்தியுடன் கொண்டாடும் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், அனைத்து உயிர்களையும் காக்கும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை 'ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி' என்றும் 'கோகுலாஷ்டமி' என்றும் பக்தியுடன் கொண்டாடும் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

"அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்" என்றுரைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், குழந்தைகளைக் கிருஷ்ணனைப் போல் அலங்கரித்து, வீட்டின் தலைவாசலில் இருந்து பூஜை மண்டபம் வரை ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தையின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து பதிய வைத்து, கிருஷ்ணருக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள், சீடை, முறுக்கு போன்ற பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வணங்கி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

நல்லோரை காத்து தீயோரை அழித்து, அறத்தை நிலை நிறுத்தி, ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்திற்கு உபதேசித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவருளால் தீயவை அகன்று, நன்மை செழித்து அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை மனதார வேண்டுவதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

"குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்வுடன் வாழ்ந்திடலாம்" என்ற ஸ்ரீ கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில் கொண்டு ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை 'ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி' நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day