தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த ஆர்சிபி

எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 17 ஆண்டு காத்திருப்புக்கு பின்னர் ஆர்.சி.பி அணி முதல்முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அணி வீரர்களை வரவேற்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருப்பதாகவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ரசிகர்களின் நலனுக்காக ஆர்சிபி கேர்ஸ் என்ற நிதியம் உருவாக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கர்நாடக அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day