பூசத்திற்கு தயாரித்தது பூசணம் பிடித்து போனது... பழனியில் டார்கெட் பிசினஸ்! 10-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

பழனி முருகன் கோயிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஆய்வு என்ற பெயரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய கண்துடைப்பு நாடகம் குறித்து விரிவாக பார்க்கலாம்... 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்... அவர்களுக்கு திருக்கோயில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு திருக்கோவில் ஊழியர்களை வைத்து ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்களில் பெரும்பாலானவை இன்று வரை  விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது. இதனை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இரவு பகலாக விற்பனை செய்து வருவதால், கெட்டுப்போன பிரசாதங்களை பக்தர்கள் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை செந்தில் குமார் கூறுகையில், கடந்த 26 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் 15 நாட்களுக்குள் விற்கப்பட வேண்டும்.. ஆனால், தேவஸ்தான நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யப்படும் லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பிரசாதங்கள் குறிப்பிட்ட நாட்கள் கடந்து விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினா்... மேலும், அதனை வாங்கிச் செல்லும் பக்தர்கள், அதில் கெட்டுப்போன வாசனை வருவதாகவும் மற்றும் தேதி குறிப்பிடாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுவதாக ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை செந்தில் குமார் குற்றம் சாட்டினார்.

இதனை அறிந்த பக்தர்கள், பிரசாதங்கள் விற்பனை செய்யும் ஊழியர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, பக்தர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளனா்... இதுதொடர்பாக பழனி உணவுத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனா்... இந்நிலையில் பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டதற்கு, இது பொய்யான செய்தி என கோயில் நிர்வாகம் சார்பில் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது...

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கலைவாணி தலைமையிலான 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, கெட்டுப்போன பிரசாதம் விற்பனை செய்த கடைகளில் ஆய்வு மேற்கண்டனர்..

அப்போது லட்டு எண்ணை சிக்கு வாடை அடிப்பதாகவும், லட்டு காய்ந்து விட்டதாக ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்கிறோம் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது பஞ்சாமிர்தக் குடோனை ஆய்வு செய்யாமல், பிரசாதங்கள் தயாரிக்கும் நிலையத்தை மட்டும் ஆய்வு செய்தனர். அப்போதும் கூட பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதி இல்லை என்றும் ஒரு சிலர் மட்டும் வரலாம் என பழனி காவல் கண்காணிப்பாளர் சுப்பையா தெரிவித்திருக்கிறார்.. இதையடுத்து மூன்று செய்தியாளர்கள் மட்டும் உள்ளே சென்றனர். உள்ளே சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேக்கிங் செய்யும் கவர்கள் மாற்றப்பட வேண்டும் எனவும் எண்ணையை நன்றாக வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் காலாவதி தேதியை பதிவு செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்லும் பழனி முருகன் கோயிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டது முருக பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Night
Day