அமைச்சரிடமே புகார் மனு அளித்த திமுக கவுன்சிலர் விழிபிதுங்கிய மா.சு. 10-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது, இது குறித்து திமுக மாமன்ற உறுப்பினரே புகார் மனு கொடுத்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.... இது குறித்த தொகுப்பை பார்ப்போம்... 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டார். இதில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்... அப்போது, திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட அமைக்கப்படவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினா்... 

அப்போது பேசிய அவா், மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் இல்லாததால், மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அன்புமணி ராமதாஸுக்கு தேவை என்றால், தற்போது அவர் இணக்கமாக உள்ள மத்திய பாஜக அரசிடம் பேசி கேட்டு பெறலாம் என்றார்.

தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிடி ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கேள்வி முன்வைத்தனா்..

மேலும், மருத்துவ கழிவுகள் மற்றும் பொது கழிவுகள் ஒன்றாக கலந்து வைக்கப்படும் புகார் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அப்போது மருத்துவ கல்லூரி பகுதியை சேர்ந்த திமுக மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் புகார் மனுவை அமைச்சரிடமே வழங்கினா்... அதில், எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது எனவும் இதனால் உள் மற்றும் வெளி நோயாளிகள் அவதிப்படுவதாகவும் குறிப்பிட்டுயிருந்தார்...

அதேபோல் மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு முறையான குடிநீர் வசதி கூட செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கடிதத்தை அமைச்சர் சுப்பிரமணியுடன் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

Night
Day