கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், டேங்கர் லாரிகள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

அதிக முதலீடு செய்துள்ள டேங்கர் லாரிகளை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது என்பதால், ஒப்பந்த காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், கடந்த 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களில் டேங்கர் லாரி வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால், தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்க தயாராக இருப்பதாகவும், இடைப்பட்ட காலத்தில் புதிய டெண்டர் நடைமுறைகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதை ஏற்று கொள்வதாக டேங்கர் லாரி சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி எம்.தண்டபாணி, தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளார். இடைப்பட்ட காலத்தில் எந்த வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்றும் டேங்கர் லாரிகள் சங்கத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில்,  ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டேங்கர் லாரிகள் பணிகளுக்கு திரும்பியுள்ளன.

varient
Night
Day