மயில் போல பொண்ணு ஒன்னு... இசைராஜாவின் இளவரசி!

எழுத்தின் அளவு: அ+ அ-

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இசைஞானி இளையராஜவின் மகளும், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரிணி, அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். இவரது குரல் கேட்பதற்கு மிகவும் வித்யாசமானதாக இருக்கும். 

இசைஞானி இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவரது மகள் பவதாரிணி, தொடர்ந்து எண்ணற்ற ஹிட் பாடல்களை பாடியுள்ளார். 

பாரதி படத்தில் "மயில் போலப் பொண்ணு ஒன்னு" என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்றுள்ளார் பவதாரிணி. ராமன் அப்துல்லா, புதிய கீதை உள்ளிட்ட படங்களிலும் பவதாரிணி பாடல்களை பாடியுள்ளார்.
 
ரேவதி இயக்கிய பிர் மிலேங்கே படத்திற்கும் பவதாரிணி இசையமைத்தார். அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் பெரும் ஹிட்டானது. மேலும் இவர் பாடிய பல பாடல்களும் பிரபலமடைந்தன. அதில் குறிப்பிடும்படியானவை, உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய ஆத்தாடி-ஆத்தாடி, செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா ஆகிய பாடல்களாகும். பவதாரிணியின் வித்யாசமான குரல் வளமே அவரைத் தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும். 

பவதாரிணியின் கணவர் பெயர் சபரிராஜ். அவர் விளம்பர நிறுவன நிர்வாகியாக உள்ளார். இந்தநிலையில்தான் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இலங்கையில், ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி தனது 47-வது வயதில் உயிரிழந்துள்ளார். பவதாரிணியின் மறைவு தமிழ் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   

Night
Day