நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின்- நாளை தீர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, 
ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரதீப் அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் தான் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ளார் என்றும் ஆனால் அவரிடமிருந்து எந்த ஒரு போதை பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும் வாதிட்டார். 

இதேபோன்று நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போலீசார் அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரான நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கிருஷ்ணாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என்றும் வாதிட்டார். இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் கைதான பிரசாத்தின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், முதல் எதிரி பிரவீன் குமாரும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி நிர்மல்குமார் அறிவித்தார்.

Night
Day