அரசு அலுவலகத்தில் இன்டர்வியூ... "தானா சேர்ந்த கூட்டம்" பட பாணியில் மோசடி 16-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது ஒரு கும்பல்... இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அரசு அலுவலகத்திலேயே நேர்முக தேர்வு நடத்தி மோசடி செய்த கும்பலை பற்றி விரிவாக பாரக்கலாம்... 

அரசு பணி வேலை என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அப்படி அரசு பணிக்குச் செல்ல பல்வேறு போட்டித் தேர்வுகள் எழுதி அதில் வெற்றி பெற்று நினைத்த பதவிக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும் தேர்வு எழுதி எழுதி வேலை கிடைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கும் பலரையும் பார்க்க முடிகின்றது. 

அப்படி அரசு பணிக்காக காத்திருந்த இளைஞர்களை குறிவைத்து, அரசு வேலை வாங்கித் தருவதாக நடக்கும் மோசடி கும்பலின் செயல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது... அந்த வகையில், ஒரு கும்பல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து இருப்பதாக பாதிக்கப்பட்டவா்கள் திருச்சி சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனா்... 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், பெருங்குடி வலையம்பட்டியை சேர்ந்தவா் முத்துகுமார். 
இவர் மற்றும் இவருடன் சில இளைஞர்கள் மற்றும் பெண்கள் திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். 

அந்த புகார் மனுவில், அரசு வேலைக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்ததாகவும். அப்போது எங்களது தொலைபேசி எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள டி.ஆர்.ஓ. அலுவலகத்திற்கு வர வழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டி.ஆர்.ஓ. அலுவலக வளாகத்தில் முன்பு நின்று கொண்டிருந்த கௌரிசங்கர், உஷாராணி ஆகியோர் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று கூறி தன்னிடம் இருந்து 6 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டதாகவும் பின்னர் இது தொடர்பாக இளையராஜா என்பவர் தன்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார். 

பின்னர் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள அலுவலர்களை அறிமுகப்படுத்தி வைத்தாக தெரிவித்துள்ள அவர்,  தற்போது கண்காணிப்பாளராக பதவி வகித்து  வரும் ராஜ்குமார் என்பவரிடம் சான்றிதழை சரிபார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அரசு முத்திரையிட்ட பணிநியமன அரசாணையை தன்னிடம் வழங்கியதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். அரசாணை வழங்குவதற்கு முன்பாக அங்குள்ள 5 அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் தர வேண்டும் என கூறி தன்னிடம் இருந்து 25 லட்சம் ரொக்கப்பணத்தை வங்கி கணக்கு மூலம் பெற்றுக்கொண்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

அரசு அலுவலர்களுடன் உள்ள தொடர்பை பயன்படுத்தி நீர்வளத்துறை, வருவாய் அலுவலகம், மாவட்ட துணை ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் வேலை வாங்கித்தருவதாக, தனசேகர், ஆனந்த, பாலகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோரிடமும் பணம் பெற்று அரசு அடையாள அட்டை பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதன் பின்னர் மாவட்ட வருவாய் நீதிமன்ற அலுவலகத்தில் நடைபெறும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைவரையும் அழைத்ததாகவும் அங்கு சென்ற போது, பயிற்சி கட்டணம் என கூறி தங்களிடம் இருந்து மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கும் அழைத்துச் சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.
              
அதை தொடந்து நியமன ஆணை மற்றும் ஐ.டி.கார்டை வாங்கிக்கொண்ட அவர்கள், பயிற்சி வகுப்பு தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறி எங்களை அனுப்பி வைத்ததாகவும் அதன் பின்னா் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தாக வேதனை தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டவர்கள், அதன் பின்னர் அவர்களின் தொலைபேசி எண்ணை அனைத்து வைத்து விட்டதாக மனுவில் வேதனையுடன் கூறியுள்ளனர்.

அதன் பின்னா் அவர்களை தேடி சென்ற போது தலைமறைவாகி இருந்தது தெரிய வந்ததாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று கேட்ட போது, அது போன்று எந்த பணி நியமனமும் நடைபெறவில்லை என்பது தெரியவந்ததாக கூறுகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல், தங்களை போன்று 11 பேரிடம் சுமார் ஒரு கோடி மேல் பண பெற்றுள்ள மோசடி நபர்கள் மீதும், அவர்களிடம் தொடர்பு வைத்துள்ள அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள்  வலியுறுத்தியுள்ளனர். 

அரசு அலுவலர்களுடன் உள்ள தொடர்பின் காரணமாகவே, அந்தந்த அரசு அலுவலகத்திற்கு தங்களை அழைத்து சென்று மோசடி நபர்கள் அலுவலக நடவடிக்கைகளை காண்பித்தும், அரசு அலுவலர்களை அறிமுகப்படுத்தியும், பின்னர் அரசு அலுவலகத்திலேயே வைத்து தங்களிடம் பணத்தை பெற்று கொண்டதாக பகிர் தகவலை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

அரசு அலுவலர்களை சென்று கேட்டால், ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வருகிறார்கள் எனவும் அனைவரையும் எங்களால் நினைவில் வைத்து கொள்ள முடியாது என பதிலளிப்பதாக அலட்சியமாக கூறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி கும்பலுடன் அரசு அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பது இதன் மூலம் தெள்ள தெரிவாக தெரிகிறது. இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தினால் பலர் சிக்குவார்கள் என்பதில் எந்த சந்தேமுமில்லை.  

அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டுமே தவிர, குறுக்கு வழியில் இதுபோன்ற மோசடி நபர்களை நம்பி சென்றால் இந்த நிலைமை தான் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே ஓர் எடுத்துக்காட்டு... 

Night
Day