கேரளா - உதவிக்கு விரைந்த கடலோர காவல்படை கப்பல்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள கடற்கரையில் தீ விபத்தில் சிக்கிய சரக்குக் கப்பலில் கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க 2வது நாளாக கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை வீரர்கள் போராடி வருகின்றனர். கப்பலில் எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்ட பொருட்கள் இருப்பதால் எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

270 மீட்டர் நீளமுள்ள எம்.வி.வான் ஹாய் என்ற சரக்குக் கப்பல் கன்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் தேதி  புறப்பட்டு மும்பை சென்று கொண்டிருந்தது. அதில் மொத்தம் 22 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர்.

கொச்சிக்கு அருகிலுள்ள பேப்பூரில் இருந்து 78 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, கப்பலில் ​​ஒரு பெரிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து கரும்புகை எழுந்தது. கப்பலின் அடித்தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து கப்பலில் இருந்தவர்களில் காயங்களுடன் 5 பேர் உள்பட 18 பணியாளர்களையும் கடற்படை பத்திரமாக மீட்டது. 

நான்கு பணியாளர்கள் மட்டும் காணாமல் போனதால் அவர்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்க 2வது நாளாக கடலோரக் காவல் படையின் சமுத்ரா பிரஹாரி  மற்றும் சச்செட் கப்பல்கள் தீயை அணைக்கும் மற்றும் குளிரூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

இதனிடையே கொழுந்துவிட்டு எரியும் தீயால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக கப்பலின் அருகில் சென்று தீயை அணைக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் 157 கண்டெய்னர்கள் இருந்ததாகவும், அவற்றில் எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்ட பொருள்கள் இருப்பதாக கூறப்படுவதால் கண்டெய்னர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம் என்பதாலும் அருகில் செல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் கப்பலில் 100 டன் அளவிலான எண்ணெய் இருந்ததாகவும் இதனால் கடல் நீர் மாசுபடும் அபாயம் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே காணாமல் போன கப்பல் ஊழியர்கள் நான்கு பேரில் இருவர் தைவானையும் ஒருவர் இந்தோனேசியாவையும், மற்றொருவர் மியான்மாரைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 


varient
Night
Day