எழுத்தின் அளவு: அ+ அ- அ
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 68.
ஆர்எஸ்எஸ் தொண்டரான விஜய் ரூபானி 1987-ம் ஆண்டு ராஜ்கோட் நகராட்சி கவுன்சிலராக தனது அரசியல் பதவியைத் தொடங்கினார். பின்னர் 1996 முதல் 1997 வரை ராஜ்கோட் மேயராகப் பணியாற்றினார். அடுத்த ஆண்டே பாஜக குஜராத் மாநில பொதுச் செயலாளரானார். பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த 2013-ம் ஆண்டு மாநில நகராட்சி நிதி வாரியத்தின் தலைவராக இருந்த விஜய் ரூபானி 2016 பிப்ரவரியில் மாநில பாஜக தலைவராக உயர்ந்தார்.
2014 நவம்பரில் முதலமைச்சர் ஆனந்திபென் படேல் அமைச்சரவையில் ரூபானி, போக்குவரத்து, நீர் வழங்கல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்ய குஜராத்தின் 16-வது முதலமைச்சராக 2016 ஆகஸ்டில் விஜய் ரூபானி பதவியேற்றார். 2021 செப்டம்பர் வரை பதவியில் இருந்த அவர், பின்னர் கட்சி உத்தரவின்பேரில் பூபேந்திர படேலுக்கு வழிவிட்டு, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
லண்டனில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக விமானத்தில் புறப்பட்டுச் சென்ற நிலையில் விஜய் ரூபானி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தற்போது அவரின் மறைவிற்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.