எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளையும் துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய அகமதாபாத் விமான விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது. அவர்கள் யார் எதற்காக சென்றார்கள் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவைச் சேர்ந்தவர் டாக்டர் கோனி வியாஸ். இவரும் சாஃப்ட்வேர் எஞ்சினியரான இவரது அன்பான கணவர் பிரதீப் ஜோஷியும் தங்களது அழகான 3 குழந்தைகளான மிரயா,நகுல் மற்றும் பிரத்யுத் அகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
உதய்பூரில் வாழ்ந்து வந்த இந்த மருத்துவத் தம்பதி இந்நிலையில் தங்களது எதிர்காலத்தை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியையும் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க லண்டனுக்கு குடி பெயர முடிவெடுத்தனர். அதன்படி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு லண்டன் செல்வதற்காக ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானத்தில் செல்ல அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர்.
மிகுந்த கனவுகளோடும் மகிழ்ச்சியோடும் விமானத்தில் ஏறி பயணம் செய்தவர்களுக்கு தங்களின் கனவுகள் தங்களுடனேயே அஸ்தமிக்கும் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம்… விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து வெடித்ததில் சக பயணிகளோடு அந்த குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளும் தம்பதியும் எரிந்து உயிரிழந்தனர். ராஜஸ்தானில் உள்ள மருத்துவனமனையில் ஒன்றில் பணியாற்றிய கோமி வியாஸ் லண்டன் செல்வதற்காக தனது பணியை துறந்துவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
எத்தனை எத்தனை ஆவலோடும் மகிழ்ச்சியோடும் அந்த குடும்பம் சென்றதோ சோகத்தையும் துயரத்தையும் தரும் வகையில் இந்த விபத்தில் மாண்டது அவரது உறவினர்களை மட்டுமல்ல நாட்டு மக்களின் துயரத்தையும் அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாமல் லண்டனில் செவிலியராக சேவையாற்ற பயணித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்தார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரியைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா நாயர் லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியில் சேர சென்ற போது தனது உயிரை இழந்தார்.
இந்த துயரங்களைக் காட்டிலும் புதிய இடத்தில் புதிய வாழ்க்கையைத் தொடர கனவுகளை சுமந்து சென்ற இளம்பெண் ஒருவரும் மரணித்தது தான் துயரத்தின் உச்சம். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் குஷ்புவுக்கு லண்டனில் பணியாற்றும் விபுல் என்ற மருத்துவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு லண்டன் சென்ற விபுல் தனது மனைவியுடன் வாழ அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இந்நிலையில் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்த நிலையில் லண்டனில் உள்ள தனது கணவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையைத் தொடரச் சென்ற குஷ்பு உயிரிழந்தது மனதை மேலும் நொறுங்கச் செய்கிறது.