விமான விபத்தில் சிகிச்சை பெறுபவர்களை நலம் விசாரித்த பிரதமர்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அகமதாபாத் ஏர் இந்தியா பயணிகள் விமானம்  விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிட்டார்.

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று  பிற்பகல் 1.39 மணியளவில் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மெகானி நகரின் குடியிருப்புப் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தால் அந்தப் பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதையடுத்து விரைந்த மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புப் படையும் இணைந்தது. விபத்து நடைபெற்ற இடத்தையொட்டிய சாலைகள் அனைத்தும் சீலிடப்பட்ட நிலையில், அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக 3 மணி நேரம் மூடப்பட்டது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் ரக விமானத்தில் 230 பயணிகள், 2 விமானிகள், மற்றும் 10 விமான பணியாளர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ்காரர்கள், 1 கனடியர் மற்றும் 7 போர்ச்சுக்கீசிய பயணிகள் ஆவர். அதில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர். இந்த நிலையில் விமானத்தில் பயணத்தில் ஒருவரை தவிர மற்ற 241 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி டெல்லியிலிருந்து இன்று காலை தனி விமானம் மூலம் அகமதாபாத் சென்றடைந்தார். அங்கிருந்து சிவில் மருத்துவமனைக்குச் சென்ற அவர் விமான விபத்தால் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்குச் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள்  குறித்து அதிகாரிகளிடம் அவர் விவரம் கேட்டறிந்தார்.

பிரதமர் மோடியுடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் உடன் இருந்தனர். பிரதமர் மோடி வருகையையொட்டி அகமதாபாத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 




Night
Day