எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் அளித்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும் வீடியோ ஒன்றை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ராணுவ தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் கொடுக்க அனுமதி வழங்கியது யார்? எனவும், இந்த தாக்குதலின் போது இந்திய விமானப் படைக்கு எத்தனை விமானங்கள் இழப்பு ஏற்பட்டது? என கேள்வி எழுப்பி மத்திய அரசை கடுமையாக சாடி பதிவிட்டிருந்தார்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தவறான தகவல்களை பரப்புவதாக இந்திய வெளியுறவுத் துறை குற்றஞ்சாட்டி உள்ளது. மேலும், ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகே வெளியுறவுத்துறை அமைச்சர் அவ்வாறு பேசியதாகவும் விளக்கமளித்துள்ளது.