எழுத்தின் அளவு: அ+ அ- அ
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இந்த தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி, தொடக்க வீரர்களாக சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் சைம் அயூப் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாஹிப்சாதா பர்ஹான் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, முகமது ஹாரிஸ் 3 ரன், பக்கார் ஜமான் 17 ரன் எடுத்து அவுட் ஆகினர். பின்னர் வந்த சைம் அயூப், முகமது நவாஸ் இருவரும் ரன் எடுக்காமல் அவுட் ஆகினர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
128 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். கில் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா அதிரடியுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 15.5 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.