திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாதரை வழிபட்டார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கநாதரை வழிபட்டார். 

தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வருகை தந்த பிரதமர் மோடி, நேற்று கேலோ இந்தியா விளையாட்டை தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து அவர், இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்ரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்றார்.  

அவர் அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றார். வடக்குவாசல் சாலை வழியாக சென்ற அவருக்கு, சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்றுகொண்டிருந்த பாஜகவினர், பிரதமர் மோடி மீது மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, காரில் நின்றபடி, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

கோவிலுக்கு செல்லும் முன், பிரதமர் மோடியை, அங்கிருந்த பரதநாட்டிய கலைஞர்கள், பறை இசை கலைஞர்கள் வரவேற்றனர். பின்னர் ஸ்ரீரங்க கோயில் ஆண்டாள் யானையிடம் ஆசி பெற்றார். அப்போது, யானை மவுத்தார்கன் வாசித்ததை கண்டு மகிழ்ச்சியடைந்த பிரதமர் யானைக்கு பழத்தை கொடுத்து மகிழ்ந்தார். இதைதொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

தெற்கு வாசல் வழியாக பாரம்பரிய உடையுடன் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்குள் சென்ற பிரதமர் மோடி, கருட ஆழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மூலவர் ரங்கநாத சுவாமியை தரிசனம் செய்த பிரதமர்,  தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்தார். 

இதைதொடர்ந்து தாயார் சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில், நடைபெற்ற கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் அவர் தமிழரிஞர்கள் பாடிய கம்பராமயண பாடல்களை கேட்டு மகிழ்ந்தார்.

varient
Night
Day