எழுத்தின் அளவு: அ+ அ- அ
பக்ரீத் பெருநாளையொட்டி பல்வேறு இடங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜூம்மா மசூதியில் காலை முதலே சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது. தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் அன்பையும் ஈகை குணத்தையும் பரவச் செய்ய வேண்டும் என்றும் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியையும், அமைதியையும், வளத்தையும் வழங்க வேண்டும் என்றும் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி திடலில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று உலக அமைதிக்காகவும் நாடு செழிக்கவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். தொழுகைக்கு பின்னர் அனைவருக்கும் குர்பானி வழங்கப்பட்டது.
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் சந்தை திடலில் சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது. அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து கொண்டு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
திருச்சி பீம நகர் தவ்ஹீத் திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற கூட்டுத் தொழுகையில் ஏராளமானோர் தொழுகை செய்தனர். இதேபோல் சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பிலும் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி திடலில் ஏராளமான இஸ்லாமியர்கள் பக்ரீத் கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்த பின்னர் ஒருவரையொருவர் கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பள்ளி வாசல்களிலும் தொழுகை நடைபெற்றது.