எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வரும் 30ம் தேதி வரை கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கோவை, நீலகிரியில் இன்று கனமழை பெய்ய வாப்புள்ளதாகவும் கணித்துள்ள வானிலை மையம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகக்கூடும் என்றும் வரும் 1 ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மலைபகுதியின் ஒரு சில இடங்களில் வரும் 30ம் தேதி வரை கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.