எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களை வரவேற்று பெங்களூருவில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களை வரவேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 1 சிறுமி மற்றும் 4 பெண்கள் உட்பட 11 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநில அரசு இதுபோன்று மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சியை முன்கூட்டியே கணித்து அதற்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க தவறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றும், கர்நாடக அரசு இதனை சரியாக திட்டமிட்டு இருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகாமல் தடுத்து இருக்கலாம் என்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.