எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரையில் நாளை நடைபெறவுள்ள பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதுரை வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், பாஜக தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி மதுரையில் நாளை பிற்பகல் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு மதுரை வருகிறார். சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இரவு தங்கும் அமித் ஷா, நாளை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பிற்பகல் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றுகிறார். இதில் கட்சியின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.