எழுத்தின் அளவு: அ+ அ- அ
பக்ரீத் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் சிறப்புத் தொழுகை நடத்தியும், இறைச்சியை வழங்கியும் இஸ்லாமியர்கள் கடமையை நிறைவேற்றினர்.
இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் அசாதாரணமான தியாகமும், உறுதியான இறை நம்பிக்கையும் போற்றும் விதமாக பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். டெல்லியில் ஜமா மசூதி திறந்த வெளித் திடலில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு கூட்டுத் தொழுகை நடத்தினர்.
மத்தியபிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை பிரமாண்டமாக நடைபெற்றது. இத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தியாகத் திருநாள் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. மும்பையில் உள்ள மஹிம் தர்கா மற்றும் தர்கா அமைந்துள்ள சாலையில் நடைபெற்ற தொழுகையில் பெருவாரியான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திறந்த வெளியில் பிரமாண்டமான முறையில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பாட்னா நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் கூடி சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.