போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7ம் தேதி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் ஜாமின் வழங்கக் கோரி நடிகர்கள், ஸ்ரீகாந்த மற்றும் கிருஷ்ணா சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமின் மனு மீது இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமின் அளிக்க வேண்டும் என்று கிருஷ்ணா தரப்பு வழக்கறிஞர் வாதமிட்டார். அதேபோல், போதை பொருள் பயன்படுத்துவதற்கும், கைவசம் வைத்திருப்பதற்கும் வித்தியாசம் உள்ளதாக நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.
மேலும், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு ஜாமின் அளிக்க காவல்துறை தரப்பில் எதிர்த்து தெரிவித்து இருந்த நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்து மாலை தீர்ப்பளிக்க அளிக்க உள்ளது.