கன்னியாகுமரி மாவட்டம், திக்கணங்கோட்டில் இளம்பெண் வரதட்சணை கொடுமையால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் கைப்பட எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் சிக்கியது.
திக்கணங்கோட்டில் வசிக்கும் நிதின் ராஜ் - ஜெபிலா மேரி தம்பதியினருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெபிலா மேரி தற்கொலை செய்து கொண்டதாக மாப்பிளை வீட்டார், பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது பெண் உயிரிழந்ததைக்கண்டு கதறி அழுதனர்.
பின்னர் பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில், கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தங்கள் மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி அடித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக வரதட்சணை கொடுமையால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இளம்பெண் தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், தனது முடிவுக்கு தனது கணவரோ, கணவர் குடும்பமோ காரணம் அல்ல என கூறப்பட்டுள்ளது.