எழுத்தின் அளவு: அ+ அ- அ
மது போதையில் நண்பர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூரைச் சேர்ந்த ராஜாராமன் என்பவர் புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி எழும்பூரில் உள்ள தனியார் மதுபான பாரில் மது அருந்திவிட்டு நண்பர்களுடன் ஸ்னூக்கர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ராஜாராமன் தாக்கப்பட்டார்.
உடனடியாக அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ராஜாராமன் உயிரிழந்தார். இந்தநிலையில், ராஜாராமன் மீதான தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இருந்தும் தாக்கியவர்களை போலீசார் கைது செய்யவில்லை என அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனிடையே ராஜாராமன் உயிரிழந்த நிலையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் கூறி ராகேஷ், சரத்குமார் ஆகிய 2 பேரை எழும்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.