சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் உடலில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் காயங்கள் இருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
போலீசார் தாக்குதலில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் உடலுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உடற்கூராய்வின் மூலம் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பலியான இளைஞரின் மண்டை ஓடு தொடங்கி, கைகள், முதுகு, கால்கள் என உடல் முழுவதும் காயங்கள் பரவி இருந்ததாகவும், கழுத்தின் சங்குப்பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக் கசிவு போன்றவை கூட மரணத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே இளைஞரின் உடலில் அசாதாரண அளவிலான தாக்குதல்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.