தற்கொலைக்கு தாய், தந்தை, சகோதரர்களே காரணம் என கடிதத்தில் எழுதிவிட்டு தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலைக்கு முன் எழுதி வைத்துள்ள கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளிக்கரனையை சேர்ந்த பிரவீன் - ஷர்மிளா ஆகியோர் இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு, பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் சுய மரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் பிரவீனை கடந்த பிப்ரவரி மாதம் ஆணவக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், முறையாக விசாரணை நடைபெறவில்லை என மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, கடந்த 14ம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனிடையே, ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து எழுதி வைத்துள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அந்த, தற்கொலை கடிதத்தில் தனது சாவிற்கு தந்தை துரை, தாய் சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகிய 4 பேர் மட்டுமே காரணம் என குறிப்பிட்டுள்ளார். சாவிற்கு காரணம் தனது குடும்பத்தினரே என்று தெரிவித்துள்ளதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பிரவீனை கொலை செய்த வழக்கில் தினேஷ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day