காவல்நிலையம் சூறை - அதிர்ச்சி தகவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் காவல் நிலையம் சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தை சேர்ந்த மாரிமுத்து- மாரியம்மாள் தம்பதியின் மகன் அழகேந்திரன். இவர், மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன்பு சத்திரப்பட்டி அருகே உள்ள கண்மாய் கரையில், தலை துண்டித்து அழகேந்திரன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த ஆணவப் படுகொலை வழக்கில், பிரபாகரன் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பிரபாகரனின் வீட்டுக்குச் சென்ற போலீசார், அவர் இல்லாத காரணத்தால், அவரது தந்தையை விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தனது நண்பர்களுடன், நேற்றிரவு மதுபோதையில் சத்திரபட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து, அங்கிருந்த கணினி, மேஜை, அலைபேசி கருவிகள் மற்றும் உபகரணங்களை அடித்து நொறுக்கினர். 

இரவு பணியில் இருந்த தலைமைக் காவலர் பால்பாண்டியனை தாக்க முயன்ற நிலையில், அவர் தப்பி அங்கிருந்த அறைக்குள் சென்று   பூட்டிக்கொண்டார். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். 
இந்நிலையில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், சூறையாடப்பட்ட காவல்நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். 

விளம்பர திமுக ஆட்சியில், பாதுகாப்பு அளிக்கும் காவல் நிலையம் மீதே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் சட்டம், ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

Night
Day