எழுத்தின் அளவு: அ+ அ- அ
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட உள்ள தண்டனை விவரம் வரும் 2ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 19 வயதான மாணவி, பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின்பேரில் அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை மிரட்டி நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 12 பிரிவுகளின்கீழ் ஞானசேகரன் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. இந்த வழக்கின், அனைத்து தரப்பு விசாரணைகளும் கடந்த 23ம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணையின்போது பதியப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். வயதான தாய் உள்ளதாலும் தனக்கு 8ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை உள்ளதை கருத்தில் கொண்டும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளி ஞானசேகரன் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு தமிழக காவல்துறை தரப்பில் குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் குற்றவாளிக்கு இரக்கம் காட்டக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்க சட்ட பிரிவுகள் உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதி, தண்டனை விவரங்கள் வரும் ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.