எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரான் - இஸ்ரேல் இடையிலான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணையைக் கொண்டு தாக்கவிருப்பதாக ஈரான் திட்டமிட்டுள்ளது பதற்றதை அதிகரித்துள்ளது.
கடந்த 13ஆம் தேதி ஈரானை குறிவைத்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3 என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஷதாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் உளவு அமைப்பின் தலைமையகம், விமானப் படையின் ஏவுதளங்கள், புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகங்கள் என நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் ராணுவ உள்கட்டமைப்புகளைக் குறி வைத்து செஜ்ஜில் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செஜ்ஜில் ஏவுகணை சுமார் 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது என்றும், அதிவேகமாக இலக்கை அடையும் என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலாக இருக்கும் என்றும், அதிவேகம் காரணமாக, இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புகளால் செஜ்ஜில் ஏவுகணையைத் தடுக்க முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இரண்டு நிலைகளைக் கொண்ட செஜ்ஜில் ஏவுகணையில், திட எரிபொருள் நிரப்பப்படுவதாகவும், தரையில் இருந்து தரையில் இருக்கும் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இஸ்ரேலின் எந்தவொருப் பகுதியையும் குறிவைத்து ஈரானால் தாக்க முடியும் என்றும், அதுமட்டுமின்றி தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் கூட ஈரானால் தாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரவ எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகளைவிட, திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகள் இயங்க குறைந்த நேரமே எடுப்பதால் எதிரிகளின் கண்டுபிடிப்புத் தொழில்நுட்பங்களில் சிக்காது என்றும் ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ஈரான் நாட்டின் தொழில்நுட்ப பாதுகாப்புத் திறனுக்கும், உள்நாட்டு சக்திக்கும் அடையாளமாக இந்த செஜ்ஜில் ஏவுகணை இருப்பதால் தான் உலக நாடுகளே அச்சப்படுவதாக தெரிவித்துள்ளன. இஸ்ரேல் - ஈரான் சண்டையில், செஜ்ஜில் ஏவுகணையின் பயன்பாடு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.