கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன்

எழுத்தின் அளவு: அ+ அ-

சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான தயாநிதி மாறன் தனது கோடீஸ்வர சகோதரர் கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதன் மூலம் மாறன் சகோதரர்களுக்கு இடையேயான குடும்பச் சண்டை அம்பலமாகியுள்ளது.

கடந்த ஜூன் 10ஆம் தேதி கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் உட்பட ஏழு பேருக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக MONEY CONTROL டாட் காம் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நோட்டீசில், கடந்த 2003ம் ஆண்டு முரசொலி மாறன் இறந்த பின்னர் சன் டிவி நிறுவன பங்குகள் மாறன் சகோதரர்களின் தாயார் மல்லிகா மாறன் பெயருக்கு இறப்புச் சான்றிதழ், சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழ் போன்ற முறையான சட்ட ஆவணங்கள் இல்லாமல் மாற்றப்பட்டதாகவும், அவை சில நாட்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குகளை கலாநிதி மாறனுக்கு மாற்ற உதவுவதற்காக இந்த பரிமாற்றம் செய்யப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கலாநிதி மாறன் தனக்கு தலா 10 ரூபாய் விலையில் 12 லட்சம் பங்குகளை ஒதுக்கியதாகவும், இது குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் சட்டவிரோத செயலாகும் என்று தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீசில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக மணி கன்ட்ரோல் டாட் காம்  தகவல் வெளியிட்டுள்ளது. அப்போதைய நிலவரப்படி பங்குகளின் மதிப்பு 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகளை அசல் பங்குதாரர்களின் ஆலோசனையோ அல்லது ஒப்புதலோ இல்லாமல், தலா 10 ரூபாய் முக மதிப்பில் கலாநிதி மாறன் ஒதுக்கியுள்ளார் என்றும், அந்த நேரத்தில், நிறுவனம் நிதிரீதியாக வலுவாக இருந்ததாகவும், பணம் திரட்ட வேண்டிய அவசியமில்லை என்றும், எனவே இந்தப் பங்குகளை வெளியிட எந்த காரணமும் இல்லை என்றும் நோட்டீசில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு, கலாநிதி மாறன் எந்தப் பங்குகளையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை என்றும், ஆனால் இந்த நடவடிக்கைக்கு பிறகு, அவர் பெரும்பான்மை உரிமையாளரானார் என்றும், இதனால் அசல் குடும்பங்களின் பங்குகள் ஒவ்வொன்றையும் 50ல் இருந்து வெறும் 20 சதவீதமாக குறைத்தார் என்றும் நோட்டீசில் தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளதாக மணி கன்ட்ரோல் டாட் காம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் நிறுவன மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ், பணமோசடி உட்பட கடுமையான குற்றங்களாக கருதப்படுவதால், தயாநிதி மாறன் அரசு விசாரணையை தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் மூலம் கோருவார் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகளை கையாளுவதில் 2003ம் ஆண்டு இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்றும் நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபரில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. தொடர்ந்து கலாநிதி மாறன் மீது பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, தற்போது இரண்டாவது முறையாக சிவில், குற்றவியல், ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனக்கூறி வக்கீல் நோட்டீஸை தயாநிதிமாறன் அனுப்பியுள்ளதாகவும் மணி கன்ட்ரோல் டாட் காம் செய்தி வெளியிட்டுள்ளது.

Night
Day