ஈரான் வான்பரப்பு திறப்பு - தாயகம் திரும்பும் ஆயிரம் இந்திய மாணவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக தங்கள் நாட்டு வான்வெளியை ஈரான் அரசு திறந்து விட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள ஆயிரம் இந்திய மாணவர்கள் ஈரானின் மகான் ஏர்வேஸ் விமானங்கள் மூலம் தாயகம் திரும்புகின்றனர்.

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் அதிகரித்து வரும் நிலையில் ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆபரேஷன் சிந்து மூலம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக 110 இந்திய மாணவர்கள் அர்மேனியா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டனர். 

தொடர்ந்து மேலும் ஆயிரம் இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து இந்தியா வந்தடைய உள்ளதாக அந்நாட்டிற்கான இந்திய துணை தூதர் டெல்லியில் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து கோம் நகரம் வழியாக மஸ்சாத் நகருக்கு மாணவர்கள் அழைத்து வரப்படுவார்கள். பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்கு ஈரான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் ஏர்வேஸின் 3 விமானங்கள் மூலம் அவர்கள் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமான மஸ்சாத், ஈரான்- துருக்மெனிஸ்தான் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள நகரம் ஆகும். இங்கு இஸ்ரேல் தாக்குதல் இல்லாத நிலையில் இந்நகரத்தின் வழியாக இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றனர். ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக ஈரான் அந்நாட்டின் வான்வெளியை மூடியுள்ள நிலையில் இந்திய அரசின் பேச்சு வார்த்தையை அடுத்து இந்திய மாணவர்களுக்காக அந்நாட்டு வான்வெளியை ஈரான் அரசு திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day