திண்டுக்கல்லில் சிபிஎம் - இந்து முன்னணியினர் மோதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்து முன்னணியை சேர்ந்த வினோத் என்பவரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பு மாறியது. இந்த மோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சார்ந்த சரத் என்பவருக்கும் இந்து முன்னணியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார் இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்து முன்னணியினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திடீரென தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

இந்து முன்னணியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருதரப்பினரும் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் அவர்களுக்கு இடையே மோதல் உருவானது. இதில் இந்து முன்னணி பிரமுகர்கள் சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

Night
Day