எழுத்தின் அளவு: அ+ அ- அ
11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா நிகழ்வில் பங்கேற்ற லட்சக்கணக்கானோருடன் இணைந்து பிரதமர் மோடி யோகா பயிற்சியில் ஈடுபட்டார். யோகா முழு உலகத்தையும் இணைத்துள்ளது என்பதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறி அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்த நிலையில், 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபை அறிவித்தது.
இந்நிலையில் 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கிலோ மீட்டர் நடைபாதை தேர்வு செய்யப்பட்டது.
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடியை வரவேற்ற, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். யோகா முழு உலகத்தையும் இணைத்துள்ளது எவ்வாறு என்பதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கான, "ஒரு பூமிக்கு, ஒரு ஆரோக்கியத்திற்கு யோகா" என்ற கருப்பொருள் ஒரு ஆழமான உண்மையை பிரதிபலிக்கிறது என்றும். நாம் தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்கள் அல்ல, இயற்கையின் ஒரு பகுதி என்பதை யோகா நமக்கு உணர்த்துவதாகவும் தெரிவித்தார்.
பின்னர், 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரும் யோகா பயிற்சி செய்தனர். கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் மிகப்பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடத்தப்படும் என்று சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.