எழுத்தின் அளவு: அ+ அ- அ
விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் முகங்கள் தீயில் சேதமடையாமல் இருந்ததால் எளிதாக அடையாளம் காணப்பட்டு 6 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்கள் மற்றும், விமானம் விழுந்த இடத்தில் இருந்த குடியிருப்புகளில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விமானம் நெருப்புக் கோளமாக மாறியதால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கரிக்கட்டையாக காணப்படுகின்றன. 6 பேரின் முகங்கள் எரியாமல் இருந்ததால் எளிதாக அடையாளம் காணப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றவர்களை அடையாளம் காண உயிரிழந்தவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு வருகிறது. டிஎன்ஏ சோதனை நடத்தி முடிக்க குறைந்தது மூன்று நாள்கள் ஆகும் என்றும், அதன்பிறகே உடல்களை ஒப்படைக்கும் பணி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனை வளாகத்தில் சோகத்துடன் காத்திருக்கின்றனர்.