சிக்கிமில் பெருமழை - நிலச்சரிவு - 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - 6 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நீடிக்கும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் வடகிழக்கு மாநிலங்கள் தத்தளித்து வரும் நிலையில், சிக்கிமின் சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆறு வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களில் அசாம், மிசோரம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய 6 மாநிலங்கள் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அசாமின் 19 மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 64 ஆயிரம் பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து தண்ணீர் பாய்ந்ததால் பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகளில் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் லோயர் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள திபாங் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இரண்டு நாட்களாக சிக்கித் தவித்த அசாமின் டின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேரை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டது.

இந்தியா, சீனா மற்றும் மியான்மர் எல்லையின் முச்சந்திப்புக்கு அருகிலுள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் ஒரு பாரம்பரிய தொங்கு பாலத்தை கடும் வெள்ளத்திற்கு மத்தியில் ஒருவர் கடக்கும் வீடியோ வெளியாகி காண்போரை மிரள செய்துள்ளது.

மணிப்பூரில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 3 ஆயிரத்து 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 883 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கிமில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் சாட்டன் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். ஆறு பாதுகாப்பு வீரர்கள் காணாமல் போயுள்ளனர். இதுவரை மூன்று உடல்களும் நான்கு பேர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டதாக கூறியுள்ள ராணுவ அதிகாரிகள், காணாமல் போன ஆறு பேரைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுக்கள் சவாலான சூழ்நிலையிலும் தீவிரமாக செயலாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 முதல் 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ள 6 மாநில மக்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும் தொடர்பு கொண்டு, மத்திய அரசின் முழு ஆதரவையும் உதவியும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Night
Day