யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது - தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சம்பவம் நடந்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி பல முக்கிய விஷயங்கள் நடந்ததாகவும், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி இரவு சென்னை அண்ணா பல்கலை கழத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற்ற அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக  சிடிஆர் எனப்படும் call detail record அடிப்படையில் சில தகவல்களை பகிர்ந்து கொள்வதாகக் கூறினார். முக்கிய குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை கொடுத்திருப்பது சந்தோஷமான விஷயம் என்றாலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைப்பதற்கான வேலையை அரசு முழுமையாக செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி கைது செய்யப்பட்டு அன்றே ஞானசேகரன் விடுவிக்கப்பட்டு பின்னர் 25ம் தேதி மீண்டும்  கைது செய்யப்பட்டதாக கூறிய அண்ணாமலை, அவரை எதற்காக வெளியில் விட்டார்கள், இதில் சம்பந்தப்பட்டிருப்பது யார், அந்த அளவுக்கு திமுக-வில் உள்ள சில தலைவர்களுக்கு பதற்றம் ஏற்பட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சம்பவம் நடந்த பின்னர் பிளைட் மோடில் இருந்த ஞானசேகரனின் செல்போன், அதிலிருந்து வெளியே வந்த பின்னர் முதல் அழைப்பாக காவல் துறை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டதாக அண்ணாமலை கூறினார். பின்னர் அந்த அதிகாரி பின்னர் ஞானசேகரனிடம் பேசியுள்ளார். இது எதற்காக என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். 

குற்றம் நடத்த அடுத்த நாள் டிசம்பர் 24ம் தேதி திமுக 170வது வட்டச் செயலாளர் கோட்டூர் சண்முகத்திடம் ஞானசேகரன் 6 முறை பேசியதாகவும், 24ம் தேதி இரவு அமைச்சர் மா சுப்ரமணியனும், கோட்டூர் சண்முகமும் பரஸ்பரம் பேசியதாக கூறிய அவர், 24ம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்றும், அன்று ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும் அண்ணாமலை புகார் தெரிவித்தார். 

கோட்டூர் சண்முகம் மற்றும் அமைச்சர் மா. சுப்ரமணியனிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தாதது ஏன் ஏன்று வினவியுள்ள அண்ணாமலை, 2 காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்ட்ட மாணவியை சந்தித்து எப்ஐஆர் வேண்டாம், வாழ்க்கை கெட்டுவிடும் என்று மிரட்டியதாக கூறினார்.

திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகம், அமைச்சர் மா சுப்ரமணியன் இருவரும் விசாரிக்கப்பட வேண்டிய நபர்கள் என்றும் அண்ணாமலை கூறினார். டிசம்பர் 24ம் தேதி பல விஷயங்கள் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படும் என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இவ்வளவு பெரிய விஷயத்தில் காவல்துறையின் கைகளை கட்டிப் போட்டவர்கள், ஆதாரங்களை அழிக்க துணை நின்றவர்ககள் அனைவருமே தன்னைப் பொறுத்தவரை குற்றவாளிகளே என்றும் கூறினார்.



Night
Day