எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்தியா - சிங்கப்பூர் இடையிலான தூதரக உறவு மலர்ந்து 60வது ஆண்டுவிழா கொண்டாடப்படும் சூழலில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருதலைவர்கள் முன்னிலையில், இந்தியா -சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதையடுத்து, இந்தியா - சிங்கப்பூர் முதலீட்டில் மும்பையில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தின் கண்டெய்னர் முனையத்தை இருநாட்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா உடன் மிகப்பெரிய வர்த்தக உறவை சிங்கப்பூர் கொண்டுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். இந்திய மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான தங்கள் போராட்டத்தை ஆதரித்ததற்காக பிரதமர் வாங் மற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, எங்கள் உறவுகள் ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டவை என்றார். கப்பல் போக்குவரத்து, அணுசக்தி மற்றும் நகர்ப்புற நீர் மேலாண்மை போன்ற துறைகளில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.