செல்போன்களில் சஞ்சார் சாதி செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயமில்லை - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செல்போன்களில் சஞ்சார் சாதி செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயமில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது உள்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் சஞ்சார் சாதி செயலி கட்டாயம் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் தொலைதொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. தொலைதொடர்பு சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில். அனைத்து போன்களிலும் சஞ்சார் சாதி செயலியை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமைக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தல் என்றும் ஒட்டுமொத்தமாக நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக மத்திய அரசு மாற்றி வருகிறது என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தனது எக்ஸ் பதிவில் அளித்துள்ள விளக்கத்தில், சஞ்சார் சாதி செயலி வேண்டாம் என்றால், அதை நீக்கி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். சஞ்சார் சாதி செயலியை போனில் வைத்திருப்பதா வேண்டாமா என பயனர்களே முடிவு செய்யலாம் என்றும் இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, செல்போன் நிறுவனம் தயாரிப்பின் போதே சஞ்சார் செயலியை நிறுவ வேண்டும் என்ற உத்தரவுக்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உலகில் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயமில்லை என்பதால் தங்கள் தயாரிப்பில் சஞ்சார் செயலியை நிறுவவும் திட்டமிடவில்லை என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Night
Day