எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளுர் மக்களுக்கு சிறப்பு வழி ஏற்படுத்தி தரக் கோரி 500க்கும் மேற்பட்டோர் ஆலைய நுழைவு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சிறப்பு வழி இருந்து வந்தது. இந்த நிலையில் கோயில் நிர்வாகம் அந்த வழியாக உள்ளுர் மக்களை அனுமதிக்காமல், 200 ரூபாய் கட்டண வரிசையில் கட்டணம் இன்றி அனுமதிப்பதாக கூறியுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்தும், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உரிமை பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, கோயில் நிர்வாகத்தை கண்டித்து ராமேஸ்வரம் மக்கள் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுப்பு அரண்களை மீறி போராட்டக்காரர்கள் ஆலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தால் பரபரப்பு நிலவியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.