சாம்பியன் பட்டத்தை வென்றது தென்னாப்பிரிக்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் சாம்பியன் பட்டத்தை வென்று தென்னாப்பிரிக்கா அணி வரலாறு படைத்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணியின் 27 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியும் தென்ஆப்பிரிக்கா அணியும் மோதின.  முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 212 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனைத் தொடர்ந்து 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழந்து தென்னாப்பிரிக்க அணிக்கு 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 58 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 83.4 ஓவர்களில் வெற்றிக்கு தேவையான ரன்களைக் கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன் அணியானது. இதில் அதிகபட்சமாக 136 ரன்கள் அடித்த எய்டன் மார்க்ரம், லார்ட்ஸ் மைதானத்தில்  வெற்றியை நோக்கிய இன்னிங்சில் சதமடித்த 6-ஆவது வெளிநாட்டு வீரர்  என்ற பெருமையைப் பெற்றார். தென்னாப்பிரிக்க அணியின் இந்த வெற்றியின் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த அணியும் 280 ரன்களை எட்டியதில்லை என்ற நிலையும் மாறியுள்ளது.

Night
Day