எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபரேசன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் அணு ஆற்றல் மையங்கள் மீது இஸ்ரேல் வெள்ளிக் கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது. டெஹ்ரானில் உள்ள அணுசக்தி அமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி ஈரான் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து, 'ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3' என்ற பெயரில், 250க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. ஈரானின் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தாக்குதல் அச்சுறுத்தலையடுத்து மக்கள் பதுங்கு குழிகளுக்குள் தஞ்சமடைவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஈரானுக்கு ஆதரவாக ஏமனும் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஜெருசலேம் பகுதியிலும் தெற்கு மேற்கு கரையிலும் சைரன்கள் ஒலித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்தனர். இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் நகரங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாகவும் இதனால் அந்த நகரங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் ஈரானின் டெஹ்ரான் நகரமே இருக்காது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனிடையே ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன