எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்கிறார்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என புகழாரம் சூட்டினார். உலகளவில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும், அதன் வளர்ச்சியில் வங்கித் துறை முக்கிய பங்காற்றுகிறது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். இன்று விமானம் மூலம் திருச்சிக்கு செல்லும் திரௌபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
அதனையடுத்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்லும் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளவுள்ளார். சாமி தரிசனத்திற்கு பின் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, ஸ்ரீரங்கம் கோயிலில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன்கள் பறக்க காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்ரீரங்கம் கோயிலில் மதியம் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பாதுகாப்பு பணிகள் நிறைவடந்த பின்னர் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.