எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தைக்கு உணவு அளித்து கொண்டிருந்த போது படுக்கையின் மீது மின் விசிறி கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60 ஆண்டுகளாக பழைய கட்டடத்திலேயே இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் போடிநாயக்கனூர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் தமிழக-கேரள எல்லை பகுதியை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையில் குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இன்றி சுகாதார சீர்கேடாக உள்ளதாக நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஜக்கமநாயக்கன் பட்டியை சேர்ந்த பிரவீணா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. பின்னர் பிரசவ வார்டில் படுக்கையில் குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருந்த போது திடீரென தலைக்கு மேல் இருந்த மின்விசிறி படுக்கையில் விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக சற்று தள்ளி அமர்ந்திருந்ததால் தாயும், குழந்தையும் உயிர் தப்பினர். அரசு மருத்துவமனையின் நிலை எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே எடுத்துக்காட்டாக உள்ளது.