எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் நீதிமன்ற உத்தரவை மீறி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து லாரி ஒட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை 30% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூல் செய்ய உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுங்கக்கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதித்தும், தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஜூன் 18ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். ஆனால், தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் நீதிமன்ற உத்தரவை மீறி வழக்கம் போல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த லாரி ஒட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியதால், லாரி உரிமையாளர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.