எழுத்தின் அளவு: அ+ அ- அ
கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சார்பில் நடைபெற்று வரும் 12 மணி நேர முழுஅடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி கர்நாடக மாநிலம் பெலகாவியில் மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசு பேருந்து நடத்துநர் மீது மராட்டிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இது கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே மொழிப் பிரச்னையாக வெடித்ததை அடுத்து, கர்நாடகத்தில் மகாராஷ்டிரா மாநில பேருந்துகளும், மகராஷ்டிராவில் கர்நாடக அரசு பேருந்துகளும் தாக்கப்பட்டன.
பேச்சுவாா்த்தைக்கு பிறகு இரு மாநிலங்களிடையே இயல்பு நிலை திரும்பியது. இந்தநிலையில், இந்த விவகாரத்தில் மராட்டிய அமைப்பினரை கண்டித்து, கர்நாடகத்தில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெற உள்ளது.
முழு அடைப்பை மாநில அரசு ஆதரிக்காததால், கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும், பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆட்டோ தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஓட்டல் மற்றும் திரைத்துறையினரும் போராட்டத்தை ஆதரித்துள்ளனர்.
முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு, கலபுரகி உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முழு அடைப்பு முன்னிட்டு கன்னட அமைப்பினர் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடத்த உள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க கர்நாடகா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக போலீஸ் பாதுகாப்புடன் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகாவில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முழு அடைப்பு நடந்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலம் கலபரகி, மெஜஸ்டிக், சாட்டிலைட் பேருந்து நிலையம், உள்ளிட்ட பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஓசூர் இருந்து இயக்கப்படும் பேருந்துகளும், கர்நாடகாவில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படுவதால் பயணிகள் எவ்வித பாதிப்பிற்குள்ளாகாமல் பயணிகள் பயணித்து வருகிறார்கள்.

முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு, பல இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மைசூரில் கர்நாடக அரசுப் பேருந்துகளை வழிமறித்தும், மண்டியாவில் சாலையில் படுத்து உருண்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர். சிக்மகளூருவில் கடைகளை அடைக்க கன்னட அமைப்பினர் வலியுறுத்தியதால் பரபரப்பு நிலவியது. தும்கூருவிலும் போராட்டம் நடைபெற்றது.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக எல்லையான ஒசூர் பகுதியிலிருந்து கர்நாடகாவுக்கு தமிழக அரசு பேருந்துக்களும், கர்நாடகாவில் இருந்து அம்மாநில அரசு பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.